Friday, October 18, 2024

Geethartha Sangraham - Desika Prabhandam by Swami Vedanta Desikan

 ஸ்ரீ:

ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த 

ஸ்ரீ கீதார்த்த சங்கிரகம் 


சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்

பாரொன்றச் சொன்ன பழ மொழியுள் -ஓரொன்று

தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு

வான் ஏறப் போம் அளவும் வாழ்வு 

தனியன் 

கட்டப் பொருள் விரித்த காசினியில் நான்மறையில்

இட்டப் பொருள் இயம்பும் இன் பொருளைச் -சிட்டர் தொழும்

வேதாந்த தேசிகனை மேவுவார் தங்கள் திருப்பாதம்

புயம் அடியேன் பற்று –1-


கீதை மொழிந்து அருளும் வேதாந்த தேசிகனார் 

பாதாரவிந்த மலர் பற்று –2-

கருமமும் ஞானமும் கொண்டு எழும் காதலுக்கோர் இலக்கு என்று

அருமறை உச்சியுள் ஆதரித்தோதும் அரும் பிரமம்

திருமகளோடு வரும் திருமால் என்று தான் உரைத்தான்

தருமம் உகந்த தனஞ்சனயனுக்கு அவன் சாரதியே –1-


உகவை அடைந்த உறவுடையார் பொரலுற்ற அந்நாள்

தகவுடன் அன்பு கரை புரளத் தருமத் தளவில்

மிக உளம் அஞ்சி விழுந்து அடி சேர்ந்த விசயனுக்கோர்

நகையுடன் உண்மை யுரைக்க அமைந்தனன் நாரணனே —2-


உடலம் அழிந்திடும் உள்ளுயிர் அழியாது எனைப் போல்

விடுமது பற்று விடாததடைத்த கிரிசைகளே

கடுக உனக்குயிர் காட்டு நினைவு அதனால் உளதாம்

விடு மயல் என்று விசயனைத் தேற்றினன் வித்தகனே –3-


சங்கம் தவிர்ந்து சகம் சதிர் பெற்ற தனஞ்சயனே

பொங்கும் குணங்கள் புணர்ப்பனைத்தும் புக விட்டவற்றுள்

நங்கண் உரைத்த கிரிசை எலாம் எனவும் நவின்றார்

எங்கும் அறிவர்களே நாதன் இயம்பினனே –4-


பிறவாமை தந்திடத் தானே பிறக்கும் பெருமைகளும்

துறவாக் கிரிசைகள் தூயமதி தன்னால் துலங்குகையும்

இறவா உயிர் நன்னிலை கண்டிடும் உலகின் நிலையும்

மறை வாழு மாயவன் நேயனுக்கு அன்று அறிவித்தனனே –5-


கண்டெளிதாம் கருமம் உயிர் காட்டக் கடுகுதலும்

மண்டி அதன் படியில் மனம் கொள்ளும் வரிசைகளும்

கண்டறியா உயிரைக் காணலுற்ற நினைவுகளும்

வண் துவரேசன் இயம்பினான் வாசவன் மைந்தனுக்கே –6-


யோக முயற்சியும் யோகில் சமநிலை நால் வகையும்

யோகின் உபாயமும் யோகு தன்னால் வரும் பேறுகளும்

யோகு தனில் தன் திறமுடை யோகு தன் முக்கியமும்

நாகணை யோகி நவின்றனன் நன் முடி வீரனுக்கே –7-


தான் நின்ற உண்மையைத் தன் தனி மாயை மறைத்தமையும்

தானன்றி மாயை தனித் தவிர்ப்பான் விரகற்றமையும்

மேனின்ற பத்தர்கள் நால்வரில் ஞானி தன் மேன்மைகளும்

தேன் நின்ற செங்க ழ லான் தெளிவித்தணன் பார்த்தனுக்கே –8-


ஆராத செல்வமும் ஆருயிர் காணும் அரும் பயனும்

பேராது தன் கழல் கீழ் அமரும் பேரு வாழ்ச்சிகளும்

சோராதுகந்தவர் தூ மதி கொள்வதுவும் செய்வனவும்

தேரா விசயனுக்குத் திரு நாரணன் செப்பினனே –9-


தன் மேன்மையும் தன் பிறப்பில் தளராத் தனி நிலையும்

பன் மேனி நண்ணினன் பால் பிரியா அன்பர் ஆசைகளும்

புண் மேனி விண்ணவர் பால் புரியாத தன் புத்தியையும்

நன் மேனி நாரணன் தான் நரனுக்கு நவின்றனனே –10-


எல்லையில்லா தன் சீலமாம் இன்னமுதக் கடலும்

எல்லையில்லா விபூதி எலாம் தனதானமையும்

எல்லையில் பத்தி தனை எழுவிக்கத் திருவருளால்

எல்லையில் ஈசன் இயம்பினான் இந்திரன் மைந்தனுக்கே –11-


எல்லாம் தனக்குருவாய் இலங்கும் வகைத் தானுரைத்துச்

சொல்லால் அறிந்தது சோராமல் கண்டிட வேண்டும் என்ற

வில்லாளானுக்கு அன்று மெய்க்கண் கொடுத்திது வேறுமுண்டோ

நல்லார்கள் காண்பார் என்று நவின்றான் நாங்கள் நாயகனே –12


தன் கழலில் பக்தி தாழாததும் அதன் காரணமாம்

இன் குண சிந்தையும் ஈது அறியார்க்கு அவ்வடிமைகளும் –

தன் கருமங்கள் அறியாதவர்க்கு இலகு நிலையும்

தன் கழல் அன்பர்க்கு நல்லவன் சாற்றினான் பார்த்தனுக்கே –13


ஊனின் படியும் உயிரின் பிரிவும் உயிர் பெறுவார்

ஞானம் பெறுவகையும் ஞானம் ஈன்ற உயிர்ப் பயனும்

ஊன் நின்றதற்கடியும் உயிர் வேரிடும் உள் விரகும்

தேன் நின்ற பாதன் தெளிவித்தனன் சிலைப் பார்த்தனுக்கே –14-


முக்குணமே உயிர் முற்றவும் கட்டிட மூண்டமையும்

முக்குணமே அனைத்தும் வினை கொள்ள முயன்றமையும்

முக்குண மாயை கடத்தலும் முக்கதி தந்தளிப்பும்

முக்குணம் அற்ற பிரான் மொழிந்தனன் முடியோன் தனக்கே –15–


மூவெட்டிலும் அதின் மோகம் அடைந்த உயிர்களிலும்

நா வெட்டு எழுத்தோடு நல் வீடு நண்ணின நம்பரிலும்

மேவெட்டு வன் குண விண்ணோர் களினும் விசயனுக்குத்

தாவிட்டுலகு அளந்தான் தனை வேறு என்று சாற்றினனே –16


ஆணை மறாதவர் தேவர் அல்லா வழக்கோர் அசுரர்

கோனை மாராத குணச் செல்வா நீ குறிக்கொள் மறையைப்

பேணிய தத்துவமும் பிணியற்ற கிரிசைகளும்

காண் இதனால் விசயா என்று கண்ணன் இயம்பினனே –17-


மறை பொருந்தாதவை வல் அசுரர்க்கு வகுத்தமையும்

மறை பொருந்தும் நிலையும் வண் குணப்படி மூவகையும்

மறை நிலை தன்னை வகுக்கும் குறி மூன்றின் மேன்மையும் அம்

மறை உமிழ்ந்தான் உரைத்தான் வாசவன் தன் சிறுவனுக்கே –18-


சத்துவ வீடுடை நற் கருமம் தான் உகந்தமையும்

சத்துவமுள்ளது தான் குறிக்கொள் வகை செய்ததுவும்

சத்துவ நற் கிரிசை பயனும் சரணா கதியும்

சத்துவமே தருவான் உரைத்தான் தனிப் பார்த்தனுக்கே –19-


வன் பற்று அறுக்கும் மருந்து என்று மாயவன் தான் உரைத்த

இன்பக்கடல் அமுதாம் என நின்ற இக்கீதை தனை

அன்பர்க்கு உரைப்பவர் கேட்பவர் ஆதரித்து ஒதுமவர்

துன்பக் கடலில் துளங்குகை நீங்கித் துளங்குவரே–20-


தீதற்ற நற்குணப் பாற்கடல் தாமரைச் செம்மலர் மேல்

மாதுற்ற மாயன் மருவ இன் கீதையின் வண் பொருளைக்

கோதற்ற நான் மறை மௌலியின் ஆசிரியன் குறித்தான்

காதல் துணிவுடையார் கற்கும் வண்ணம் கருத்துடனே –21-


No comments:

Post a Comment